மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி | Electricity officials arrested for taking bribe | Melur
மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு மேலூர் மேற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மின் பொறியாளர் ஒசானம் ஜோனி மற்றும் வணிக ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ராஜேஷ் பேரம் பேசினார். இதற்கு அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். இதையடுத்து போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை மேலூர் தெற்குபட்டி மின் வாரிய அலுவலகத்தில் வைத்து ராஜேஷ் கொடுத்தார். லஞ்சப் பணத்தை வாங்கிய உதவி மின் பொறியாளர் ஒசானம் ஜோனி மற்றும் வணிக ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.