கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல் | Ethanol Blending need to be increased
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல் | Ethanol Blending need to be increased | Nallasamy | Toddy Movement | Tamilnadu அதிக எத்தனால் கலந்த பெட்ரோலை விற்க வேண்டும்; இதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி குறையும்; அந்நிய செலாவணி மேம்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். பழநியில் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் அறிவிப்பில் எந்த நிபந்தனையும் இன்றி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். கரும்பு விலையை தற்போதைய அரசு 4000 ரூபாயாக உயர்த்தி உள்ளதை வரவேற்கிறோம். பனை பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் பனை நடவு மேம்பாட்டிற்கு இந்த அரசு நிதி ஒதுக்கி உள்ளது. கள்ளுக்கான தடையை நீக்கி அறிவித்தால் மட்டுமே பனை நடவு, மேம்பாட்டிற்கு ஏற்புடையதாக இருக்கும். தென்னை விவசாயிகள் நல வாரியத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் தேவையற்ற இலவசங்கள் வழங்கியதைத் தவிர்த்து, நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், ஆறுகளை இணைக்கவும் பயன்படுத்த வேண்டும். காவிரி நீரை நீர் விகிதாசாரப் படி தினமும் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்டும் எண்ணம் வந்து இருக்காது. மேகதாது அணை கட்ட திட்டமிடும் இடத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் காடுகள் உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். நாட்டில் அதிக எத்தனால் கலந்த பெட்ரோலை விற்க வேண்டும். அதற்கான வாகன வடிவமைப்புகளை மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி குறைந்து அந்நிய செலாவணி மேம்படும். உலகில் சூப்பர் எல்நினோ வரும் சூழலில் பஞ்சம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு அரசு பல அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.