மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் வழுக்குமரம் ஏறும் போட்டி | Temple Festival | Madurai
மதுரை அருகே திருப்பாலை கிராமத்தில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா பாரம்பரியமாக மூன்று நாட்கள் கொண்டாடுவது வழக்கம். முதல் நாள் விழாவில் திருப்பாலை கிருஷ்ணன் கோயிலிருந்து ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கள்ளழகர் திருக்கோலத்தில் சாமி கிராம சாவடிக்கு வந்து சேர்ந்தார். இரண்டாவது நாள் சாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உரியடி திருவிழா நடைபெறும் நவநீதகிருஷ்ணன் சாவடி மண்டபத்தில் கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து பாரம்பரிய வழுக்கு மரம் ஏறும் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். 15 நாட்கள் கடும் விரதம் இருந்த இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறினர். இப்போட்டி 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. வழுக்கு மரத்தில் உச்சியில் உள்ள பட்டுத் துண்டை அவிழ்க்க வேண்டும். அதில் 101 ரூபாய் காணிக்கை இருக்கும். பட்டுத்துண்டு கிராமத்தில் ஏலம் இடப்படும். அந்த துண்டு அதிக விலைக்கு ஏலம்போகும். அந்த துண்டை ஏலம் எடுப்பவர்களுக்கு செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்தாண்டு வழுக்கு மரத்தில் சிறப்பாக ஏறி தினேஷ்குமார் என்ற இளைஞர் தன் குழுவின் முயற்சியோடு அவிழ்த்தார். கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த தேக்கு மரத்தில் வெந்தயம், கற்றாழை, விளக்கு என்னை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டு வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.