மதுரையில் டங்ஸ்டன் எதிர்ப்பு குழு போராட்டம் வெற்றி
மதுரையில் டங்ஸ்டன் எதிர்ப்பு குழு போராட்டம் வெற்றி | Case against 11,698 persons was cancelled | Tungsten protest group | Madurai மதுரை மாவட்டம் மேலுார் அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமை வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், விவசாயிகள் உள்ளடக்கிய கூட்டுக்குழு டில்லியில் மத்திய கனிம அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட 11,698 பேர் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலுார் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சங்கீதா சட்டம் 2023ன் கீழ், மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட, நான்கு குற்ற வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்தது. இதை டங்ஸ்டன் எதிர்ப்புக்குழு மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர்.