தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வலியுறுத்தல் | Thirupathi Dharsan | TTDC
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயண திட்டத்தை கடந்த 1974ம் ஆண்டு முதல் சென்னை - திருப்பதி இடையே செயல்படுத்தி வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களுக்கு விரைவான தரிசனத்திற்கு அனுமதி அளித்து சீக்கிர தரிசன டிக்கெட் விலையை அறிமுகப்படுத்தியது. இதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு தினமும் 400 சீக்கிர தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலூர் மற்றும் பழநி ஆகிய மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்கள் வழங்குவது ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்வது தமிழகத்திலிருந்து திருமலை வழிபாட்டிற்க்கு வரும் பக்தர்களை மிகவும் பாதிக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கருதினார். அதைத் தொடர்ந்து ஆந்திர மாநில அறநிலைய அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டியை நெல்லுாரில் வைத்து தமிழ்நாடு சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து மீண்டும் சீக்கிர தரிசன டிக்கெட் அனுமதியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வின்போது ஆந்திர மாநில நகராட்சி நிர்வாக அமைச்சர் நாராயணரெட்டி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பரூக் உடனிருந்தனர்.