தஞ்சைக்கு அழகு சேர்க்கும் சரபோஜி மன்னர் கால கலை | tanjore glass art | king serfoji | Thanjavur
சோழர் காலம் முதலே கலை பொருட்களின் தாயகமாக தஞ்சை விளங்கி வருகிறது. தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி ஆகியவை இதற்கு சான்று. இந்த பட்டியலில் தஞ்சாவூர் கண்ணாடி பொருள்களுக்கும் தவிர்க்க முடியாத இடம் உண்டு. மராட்டிய மன்னர் 2ம் சரபோஜியின் ஆதரவால் இக்கலை தஞ்சையில் வளர்ச்சி அடைய துவங்கியது. அவரது காலத்தில் தஞ்சாவூர் ஓவியத்தை மெருகூட்ட கண்ணாடி துண்டுகள் பொருத்தும் பழக்கம் இருந்தது. நாளடைவில் கண்ணாடி துண்டுகளில் இருந்து தனியாக கலைப்பொருள்கள் தயாரிக்கும் கலை வளர்ச்சி பெற்றது. இப்போது விதவிதமான கண்ணாடி கலைப்பொருள்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. துவக்கத்தில் கோயில் தொடர்பான பொருள்கள் மட்டுமே செய்யப்பட்டன. இப்போது குடம், செம்பு, கூம்பு தாம்பூலத்தட்டு, சந்தன கிண்ணம், குங்குமச்சிமிழ், நகைப்பெட்டி, அரசாணிப்பானை, சில்வர் உருளி பானை போன்றவற்றிலும் கலை நயத்துடன் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்படுகின்றன. இந்த தொழிலில் தஞ்சை தெற்கு வீதியை சேர்ந்த 64 வயதான செல்வராஜ், 52 வயதான வனஜா தம்பதியினர் 45 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். பாரம்பரியமாக இவர்கள் தயாரிக்கும் கண்ணாடி கலை பொருட்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். வடிவம், வேலைப்பாடுக்கு ஏற்ப 150 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கண்ணாடி கலை பொருட்கள் விற்பனை ஆகிறது.