ஒரு ஆதாருக்கு ₹40,000 - கொத்தாக தூக்கப்பட்ட கும்பல் | 8 arrested | fake Aadhaar | Rohingyas Bangla
வங்கதேசத்தை சேர்ந்த ரோஹியங்கா முஸ்லிம்கள், நேபாளிகள் மற்றும் பிற வெளிநாட்டவர் போலி ஆதார் பெற்றுள்ளதாக உத்தரப்பிரதேச போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இவர்களுக்கு ஆதார் மற்றும் இன்னும் பிற இந்திய ஆவணங்களை தயார் செய்து கொடுத்த 8 பேர் கொண்ட கும்பலை உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மாநிலங்களில் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி இயங்கும் ஆதார் சேவை மையங்களில் முதலில் வேலைக்கு சேர்ந்து, ஆதார் பதிவு செயல் முறைகளை கற்றுள்ளனர். அதன் பிறகு சேவை மைய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன்மூலம் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்துள்ளனர். பிறந்த பதிவு முதல் குடியிருப்பு சான்றிதழ் வரை இவர்களே போலியாக தயாரித்து, அதன் பிறகு வெளிநாட்டினருக்கு ஆதார் அட்டை தயார் செய்து தந்த விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். ஒவ்வொரு போலி ஆதார் அட்டைக்கும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. போலி ஆதார் அட்டைகள் மூலம் வெளிநாட்டினர் பாஸ்போர்ட்டுகள், பிற இந்திய ஆவணங்களையும் பெற்றதும், அரசு திட்ட பயனாளிகளாகவும் மாறியதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் மின்னணு கருவிகள், ஸ்கேனர்கள், போலி முத்திரைகளை முதலியவற்றை பறிமுதல் செய்தனர். 8 பேர் மீதும் மோசடி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.