முன்விரோதத்தால் நேர்ந்த விபரீதம்! | Husband and wife arrested | Hosur
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் மற்றும் சத்யவதி ஆகிய இருவரும் பயிற்சி வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். சத்யவதியின் கணவர் ஆனந்தகுமார் வேறொரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். கண்ணனுக்கும் ஆனந்தகுமாருக்கும் முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு வெளியே வந்த கண்ணனை வழிமறித்த ஆனந்தகுமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கண்ணனை சக வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜே.எம்.2ல் சரணடைந்த ஆனந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த ஆனந்தகுமாரின் மனைவி சத்யவதியையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வந்து செல்லும் மக்கள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் பயிற்சி வழக்கறிஞர் கொலை முயற்சியை கண்டித்து ஓசூர் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.