அமர்நாத் யாத்திரையால் ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு | Amarnath Yatra|Jammu Kashmir
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் பனி லிங்க தரிசனத்திற்காக, இந்த ஆண்டு 3.3 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்கு வந்த பக்தர்கள், 3ம் தேதி முதல் பனி லிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 2ம் தேதி இரவு ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பக்தர்களின் யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தார். முதல் கட்டமாக 5,000 மற்றும் 3,000 பேர் என இரு முகாம்களில் இருந்து பக்தர்கள் பனி லிங்க தரிசனத்திற்கு புறப்பட்டனர். 3ம் தேதி காலை அமர்நாத் குகைக் கோயிலை சென்றடைந்த பக்தர்கள், பனி லிங்கத்தின் முதல் தரிசனம் பெற்று ஹர ஹர மகாதேவ் என பக்தி பரவச கோஷமிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த கட்டமாக பனி லிங்க தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில், நேற்று ஒரே நாளில் 14,000 பேர் அமர்நாத் குகை கோயிலில் பனி லிங்கத்தை தரிசித்து விட்டு மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.