இந்தியாவில் இருந்தே பாகிஸ்தானை விளாசிய தலிபான் அமைச்சர் | Amir Khan Muttaqi | Jaishankar | Afghans
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுவரை இந்தியா அதிகாரப்பூர்வமாக தலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. இருந்தாலும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதுவரை 30 பில்லியன் டாலர்களுக்கு மேல் ஆப்கனில் முதலீடு செய்துள்ளது இந்தியா. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது. ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். 2021ல் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு இந்தியா-ஆப்கன் இடையே நடக்கும் முதல் உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பு இதுவாகும். இதன்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார். மேலும் 6 புதிய திட்டங்கள், ஆம்புலன்ஸ், மருத்துவ கருவிகள், மருந்துகள் இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ளது. இதனால் மனம் குளிர்ந்து போன தலிபான் அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இந்தியா பாராட்டி பேசினார். இது எனது முதல் இந்தியப் பயணம். ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவிருக்கிறது. நாங்களும் இந்தியாவில் தூதரகத்தை விரைவில் திறப்போம். இந்தியா - ஆப்கன் உறவுகள் வரலாற்று சிறப்பானது. 2021 ஆகஸ்ட் 15 முன்பு ஆப்கனில் ஒவ்வொரு நாளும் 200 முதல் 400 பேர் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அமைதி நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். அனைவரது உரிமையும் பாதுகாப்பாக இருக்கிறது. பெண்கள் உரிமை பிரசாரம் செய்பவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் சொந்த பாரம்பரியங்களும், கொள்கைகளும் உள்ளன. அதன்படிதான் அந்த நாடு செயல்படும். அதற்காக, நாங்கள் உரிமைகளை நிராகரிக்கிறோம் என்று ஆகிவிடாது. எங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால், எப்படி அமைதி நிலவ முடியும். இந்த அமைதியை அமெரிக்காவோ அல்லது வேறு யாரோ கொண்டு வந்தது கிடையாது. நான் இதைச் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானின் மக்கள் வெளிநாட்டு ராணுவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. யாராவது எங்கள் நாட்டுடன் உறவு வைத்திருக்க விரும்பினால், அவர்கள் ராஜதந்திர கொள்கையின் மூலம் அணுகலாம். ஆனால் ராணுவத்தின் மூலம் முடியாது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதித்து பார்க்கக் கூடாது. யாராவது இதைச் செய்ய விரும்பினால், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேட்க வேண்டும். ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல. எல்லைக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகளில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் தவறானது. இந்த முறையில் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் கதவை திறந்தே வைத்திருக்கிறோம். அவர்களின் உள்நாட்டு பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும், முன்னேற்றமும் நிலவுகின்றன. இதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. நாங்கள் ஒரு சுதந்திர தேசம். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் சிறந்த உறவுகளை நாங்கள் விரும்புகிறோம் என அமிர் கான் முட்டாகி கூறினார். #IndiaAfghanistanMeet #TalibanIndiaTalks #AmirKhanMuttaqi #SJaishankar #PakistanAirstrikes #KabulTensions #CrossBorderTerrorism #IndiaEmbassyKabul #TalibanSecurityPledge #SouthAsiaDiplomacy #AfghanistanPeace #IndiaAidAfghanistan