பாபா சித்திக் சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் | Baba Siddique | Salman Khan
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நிர்மல்நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டு கொல்லப்பட்டார். இவர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியாவார். பாபா சித்திக் கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. கேங்ஸ்டர் லாரன்ஸ் சிறையில் இருந்தபடியே கூலிப்படையாக செயல்பட்டு வந்துள்ளார். பிரபல பாடகர் சித்து மூசேவாலா, ராஜஸ்தானின் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கொலையிலும் லாரன்ஸ் கும்பலே ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானை லாரன்ஸ் கும்பல் கொலை செய்ய முயன்ற சம்பவமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொல்லப்பட்ட அரசியல் தலைவர் பாபா சித்திக் பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கமாக பழகியவர். இன்னும் சொல்லப்போனால் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர். இதனால் பாபா சித்திக் மரணத்தால் சல்மான் கான் அதிர்ச்சியில் இருக்கிறார். சமீபத்தில் தான் சல்மான் கான் வீடு மீது பிஷ்னோய் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.