சோபா, ஏ.சி, கட்டில்களை திருடி சென்றதாக புகார் | Bihar Politics | Tejashwi Yadav
பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகினார். பாஜவுடன் மீண்டும் கூட்டணி வைத்து பீஹார் முதல்வராக பதவியேற்றார். பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா துணை முதல்வர்களாகினர். கடந்த ஆட்சியின் போது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி வகித்தார். பீஹாரின் பாட்னாவில் உள்ள துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவர் தங்கி இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இல்லத்தை காலி செய்யும்படி தேஜஸ்வி யாதவுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டது. ஞாயிறன்று அவர் காலி செய்தார். இந்த பங்களா துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு பங்களாவில் இருந்த ஏ.சி. சோபா, லைட்டு, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி விட்டதாகவும், வீட்டை காலி செய்யும்போது, தேஜஸ்வி தரப்பினர் திருடி சென்று விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. சாம்ராட் சவுத்ரியின் செக்ரட்டரி சத்ருதன் குமார், இந்த குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இதை திட்டவட்டமாக மறுத்த ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, பாஜ அற்ப அரசியலில் ஈடுபடுவதாக கூறினார்.