மிரட்டல் வழக்கில் திருப்பம்: வெளியான பரபரப்பு தகவல்! | BSP Armstrong | BSP leader | Armstrong wife
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் பள்ளி தாளாளர் கைது பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணை நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு, அவரது மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட்டது. இச்சூழலில், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் ஆபீசுக்கு சதீஷ் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆம்ஸ்ட்ராங்கின் மகளை கடத்தி கொல்வோம், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை வெடிகுண்டு வீசி கொல்வோம் என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வசிக்கும் அபார்ட்மென்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக கேளம்பாக்கம் படூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர்.