வெளியேறிய கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை? மேயர் பரபரப்பு பேட்டி | Councillors walk out | DMK | Condemn
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகமான காமராஜ் மன்றத்தின், ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் மாமன்ற கூட்டம் இன்று கூடியது. மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் கவுன்சிலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் திருச்சி அரியமங்கலம் மாநகராட்சி குப்பை கிடங்கில் மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஒரு தரப்பு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வலியுறுத்தும் நிலையில், அதே பகுதியில் கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்க இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து துணை மேயர் திவ்யா, மண்டல குழு தலைவர் மதிவாணன் உள்பட திமுக கவுன்சிலர்கள் 25 பேர், காங்கிரஸ் 3 பேர், விடுதலை சிறுத்தைகள் 2, கம்யூனிஸ்ட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 31 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். இதனால் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.