உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அறக்கட்டளைக்கே அதிகாரம்; மரபுப்படி நடக்கும் வாரிசு தேடல்

அறக்கட்டளைக்கே அதிகாரம்; மரபுப்படி நடக்கும் வாரிசு தேடல்

நம் அண்டை நாடான திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா அந்நாட்டின் ஆட்சியாளராகவும் இருந்தவர். 1959ல் சீனா தன் படைகளை அனுப்பி திபெத்தை கைப்பற்றியது. சீனாவுக்கு எதிரான எழுச்சி தோல்வி அடைந்ததால், அப்போது 25 வயதே ஆன தலாய் லாமா அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அவருடன் வந்த ஆயிரக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள் திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பது இல்லை. தங்களுக்கென நாடு கடந்த அரசாங்கம் அமைத்து நிர்வகித்து வருகின்றனர். தற்போது, திபெத் மதத்தலைவராக இருப்பவர் 14வது தலாய் லாமா. இவருக்கு 90 வயது ஆகிவிட்ட நிலையில், அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில், 600 ஆண்டுகள் பழமையான ஆன்மிக மரபு தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார். திபெத்தியர்களை பொறுத்தவரை, தலாய் லாமா எனப்படும் மதகுருவின் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். அதாவது ஒரு தலாய் லாமா இறந்ததும் மீண்டும் பிறப்பதாக நம்புகின்றனர். இப்போதைய தலாய் லாமா 2 வயதாக இருக்கும்போதே 13வது தலாய் லாமாவின் மறு பிறவியாக அங்கீகரிக்கப்பட்டவர். வாரிசை அடையாளம் காண அவர்களுக்கென சில வழிமுறைகளை வைத்துள்ளனர். அதை செயல்படுத்துவது காடன் போட்ராங் எனப்படும் அறக்கட்டளையின் உயர்மட்ட துறவிகள். சீன அரசு, அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 2007ல் விதிமுறைகளை கொண்டு வந்தது. தமது வாரிசை தேர்ந்தெடுப்பதில் சீனா தலையிடுவதை தலாய் லாமா விரும்பவில்லை. சீன அரசு நியமிக்கும் ஒருவரை நிராகரிக்குமாறு தமது துறவிகளுக்கு அவர் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது 90 வயதான நிலையில், வாரிசு பற்றி அறிவித்துள்ள அவர், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு, தலாய் லாமாவின் அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களிடம் மட்டுமே இருக்கும் என அறிவித்துள்ளார். எதிர்கால மறுபிறப்பை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் கடந்த கால மரபுகளின்படி புதிய தலாய் லாமா குறித்த தேடல் மற்றும் அங்கீகார நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று தலாய்லாமா தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த தலாய் லாமா உள்ளிட்ட புத்தமத தலைவர்களை தேர்வுசெய்யும் நடைமுறையில் சீன அரசின் ஒப்புதலும், அங்கீகாரமும் அவசியம் என்று அந்நாட்டு வெளியுறவு அதிகாரி மாவோ நிங் கூறியுள்ளார். திபெத்திய ஆன்மிகத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் நடைமுறையில் உள்ளன. சுதந்திரமான மத நம்பிக்கை கொள்கையை சீன அரசு கடைப்பிடிக்கிறது. திபெத்திய பவுத்தம் சீனாவில் பிறந்தது, சீன பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ