வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஏமாற்றம் Delhi Hc ||lalu Prasad plea| Land for job scam case
2004 முதல் 2009 வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ரயில்வே மண்டலத்தில் குரூப்-டி பணி நியமனம் நடந்தது. சிலரை வேலைக்கு அமர்த்த அவர்களது நிலங்களை லாலு பிரசாத் லஞ்சமாக பெற்று, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்தனர். டில்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூன் 2ல் வழக்கின் ஆரம்ப விசாரணை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் லாலு பிரசாத் யாதவ் தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் மே 29ல் முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின்போது லாலு பிரசாத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 17A-ன் கீழ் லாலு பிரசாத் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி செய்யவில்லை. எனவே முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையை சட்டப்படி நிலை நிறுத்த முடியாது. அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றார். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டிபி சிங் அந்த வாதத்தை மறுத்தார். ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 19ன் கீழ் தேவையான முன் அனுமதிகள் பெறப்பட்டு உள்ளதாகவும் கூறி இருந்தார்.