சாலை மறியலால் திருச்சி - சென்னை பைபாசில் கடும் போக்குவரத்து நெரிசல் | Flood affected | Ponmudi
புயல் மழையால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளம் விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் வெள்ளம் அடித்து சென்ற நிலையில், உணவு, தண்ணீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். வெள்ளம் பாதித்த இடங்களை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பார்க்க வராததால் எந்த உதவியும் கிடைக்காமல் ஆத்திரமடைந்த மக்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் 4 மணி நேரமாக போராட்டம் நீடித்தது. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வன அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், விழுப்புரம் முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி, எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொதித்து போய் இருந்த மக்கள் அவர்கள் மீது தண்ணீரையும் சேற்றையும் வாரி இறைத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. (பிரத்) பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து வாக்குவாதம் செய்ததால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.