பேரம் பேசி லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு சிறை GST Officers Arrested |bribe Case| Madurai
மதுரையில், அப்பன் திருப்பதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். வரி ஏய்ப்பு செய்ததாக, கடந்த அக்டோபர் 24ம் தேதி கார்த்திக்கின் வீட்டுக்கு மதுரை மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து சூப்பிரண்ட் ராணா சிங், அசோக் உள்பட 5 அதிகாரிகள் சென்றனர். சோதனை நடத்திய அதிகாரிகள், ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி சென்றனர். ஆடிட்டருடன் சென்ற கார்த்திக், மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் துணை கமிஷனர் சரவணகுமாரை சந்தித்தார். ஒன்றரை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வீடு வாங்கி உள்ளீர்கள். சென்னை அலுவலகத்தில் இருந்து உங்கள் மீது புகார் வந்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டுமென்றால் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என சரவணகுமார் கேட்டார். மீண்டும் நவம்பர் 25ம் தேதி வருமாறு சரவணகுமார் கூறினார். இந்த முறை, 10 லட்சம் ரூபாய் கொடுங்கள் என சரவணகுமார் குறைத்து கேட்டுள்ளார். அதுவும் முடியாது என கார்த்திக் கூறியதால் பேரம் பேசி 5 லட்சம் ரூபாய்க்கு வந்து இருக்கிறார். பணம் தருவதாக கூறி சென்ற கார்த்திக், முறையாக வரி செலுத்தும் தம்மிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, சிபிஐயிடம் புகார் அளித்தார். சிபிஐ அதிகாரிகள் அறிவுரைப்படி, மூன்றரை லட்சம் ரூபாயை மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு எடுத்து சென்று சூப்பிரண்ட் அசோக் குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷனர் சரவணக்குமாரும் கைது செய்யப்பட்டார். பெண் ஆய்வாளர் சமீரா கவுதமியிடம் தீவிர விசாரணை நடக்கிறது.