இது நடந்தால் பாகிஸ்தானே ஸ்தம்பிக்கும்: வந்தது எதிர்வினை | Pakistan | India | Simla Agreement
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானியர்கள் அட்டாரி- வாகா எல்லை வழியாக இந்தியாவைவிட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் வருகிற ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும். விசா காலாவதியாகும் முன்பாக அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அதேபோல இந்தியர்கள், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கதி கலங்கி போனது. குறிப்பாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது தூக்கி வாரிப்போட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது. குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது. உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்திய இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது. மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. தற்போது இந்தியா எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் தரப்பில் இருந்து எதிர்வினைகள் வரத்துவங்கி உள்ளது.