பாக் அடிமடியில் கைவைத்த இந்தியா-முழு தகவல் kashmir pahagam attack | indus water treaty | ind vs pak
நாட்டை உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானுடன் போட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி காட்டியது. இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்ன? இதை நிறுத்தி வைத்தால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் இழப்பு என்ன? ஒப்பந்தத்தை நிறுத்துவதாக சொன்னதும் பாகிஸ்தான் கதறுவது ஏன்? என்பதை பார்க்கலாம். நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் 6 நதிகள் தான் சிந்து நதியின் தொகுப்பு. இந்த நதிகள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்ந்து பின்னர் அரபிக் கடலில் கலக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட பிரிவினையைத் தொடர்ந்து இந்த நதிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானுடன் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் 1960ல் உலக வங்கி முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் ஒப்பந்தமாக இது உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் நடந்தபோதும், இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படவில்லை. ஆனால் இப்போது நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். பாகிஸ்தானின் மொத்த நீர் தேவையில் 80 சதவீதம், சிந்து நதி தொகுப்பில் இருந்தே கிடைக்கிறது. இது நிறுத்தப்படுவதால், பாகிஸ்தானின் விவசாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். நாட்டின் ஒட்டுமொத்த நீர் தேவைக்கு, சிந்து நதி தொகுப்புகளையே பாகிஸ்தான் நம்பியுள்ளது. இதனால், முதலில் குடிநீர் உட்பட தண்ணீர் பிரச்னையை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு அடிநாதமாக விவசாயம் உள்ளது. கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை இங்கு முக்கிய பயிர்களாக உள்ளன. போதிய நீர் கிடைக்காவிட்டால், விவசாயம் பாதிக்கப்படும். இது மக்களின் வாழ்க்கையையும், உணவு பாதுகாப்பையும் பாதிக்க செய்யும். பாகிஸ்தான் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயம் 20 சதவீதமாக உள்ளது. மேலும், மொத்த வேலை வாய்ப்பில் 40 சதவீதம் விவசாயத் துறை வாயிலாகவே கிடைக்கிறது. விவசாய துறையில் ஏற்படும் பாதிப்பு, பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் வேலை வாய்ப்பின்மை உயர்வு, வறுமை போன்றவை ஏற்படும். பாகிஸ்தானின் பெரும்பாலான அணைகள், சிந்து நதி தொகுப்பையே நம்பியுள்ளன. நீர் நிறுத்தப்பட்டால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். இது மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பாதிப்பு ஆகியவை, உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர வைத்து விடும். இதனால் இறக்குமதியை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது பெருத்த அடியாக இருக்கும். இதைத் தவிர, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மற்ற உயிரினங்கள் வாழ்க்கை முறை என, பல தரப்பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், ஒரே நாளில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்த முடியாது. 10 சதவீத தண்ணீரை தான் இப்போது நிறுத்த முடியும். நீரின் ஓட்டத்தை டோட்டலாக தடுக்க வேண்டும் எனில் பல அணைகள், கால்வாய்களை அமைத்து இந்திய பகுதிக்குள் நீரை திருப்ப வேண்டும். இதற்கு சில ஆண்டு ஆகலாம்.