போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்? Israel-Hamas War | Gaza ceasefire agreement
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023, அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தினர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ல் பதவி ஏற்க உள்ளார். நான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என, டிரம்ப் எச்சரித்தார்.