டில்லி காளி கோயிலில் ஊழியருக்கு சோகம்: பரபரப்பு Kalkaji Mandir Servant Murder| Delhi Murder Case
உபி மாநிலத்தை சேர்ந்தவர் யோகேந்திரா சிங் வயது 35. கடந்த 15 ஆண்டுகளாக தெற்கு டில்லியில் உள்ள காளி அம்மன் கோயிலில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கோயில் துாய்மை பணிகளை மேற்பார்வையிடுவது, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். நேற்று கோயிலுக்கு வந்த இளைஞர்கள் மூன்று பேர், காளி அம்மன் தரிசனம் முடித்து, பிரசாரதம் வழங்கும் படி யோகேந்திராவிடம் கேட்டனர். அப்போது, யோகேந்திரா மற்றும் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மூவரும், உருட்டுக்கட்டையால் யோகேந்திராவை தாக்கினர். பலத்த காயமடைந்த யோகேந்திரா அங்கேயே மயங்கி விழுந்தார். மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கோயில் ஊழியர்கள் யோகேந்திராவை ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் ஆஸ்பிடலில் சேர்த்தனர். அங்குஅவர் இறந்தார். இந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் ஊழியரை மூன்று பேர் அடித்தே கொன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மூவரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், டில்லியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகரித்துள்ளதாகவும், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜ அரசு, டில்லி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. போலீசார் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலேயே பிசியாக உள்ளனர். மக்கள் பணி செய்வதோ, அவர்களை காப்பதோ அவர்களின் வேலையாக இல்லை. காளி கோயில் வளாகத்திற்குள்ளேயே ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த லட்சணத்தில் தான் இங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது. இப்படியே போனால், மக்கள் தைரியமாக நடமாடக் கூட முடியாத சூழல் உருவாகும் என்றும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.