கரூர் சம்பவத்தில் கற்பனை செய்ய முடியாத சோகம் karur stampede | tvk vijay karur stampede|tvk vijay
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இறந்த 39 பேரில் 10 பேர் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள். மற்றவர்களிலும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். இறந்த ஒவ்வொருவரின் பின்னணி பற்றி வெளியே வரும் தகவல்கள், குடும்பத்தினரின் கதறல் நெஞ்சை நொறுக்கிப்போட்டுள்ளது. அப்படி தான் ஆகாஷ், கோகுல ஸ்ரீ ஆகியோர் மரணம் இதயத்தை தைத்து ரணமாக்கிக்கொண்டிருக்கிறது. விஜயை பார்க்க வேண்டும்; அவர் பேசுவதை கேட்க வேண்டும் என்று சென்ற இளம் ஜோடி இப்போது இல்லை. சமீபத்தில் தான் ஆகாஷ், கோகுலஸ்ரீயின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தான் கரூர் துயரத்தில் சிக்கி உயிர் இழந்து விட்டனர். ஆகாஷ் கரூர் வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன். கோகுல ஸ்ரீ உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்தவர். 2 பேருக்கும் 24 வயது தான். கோகுலஸ்ரீ கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். பெற்றோர், உறவினர் சம்மதத்துடன் 2 பேருக்கும் நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் என்பதால், எல்லா ஏற்பாடும் தடபுடலாக நடந்தது. திருமண பரபரப்புக்கு நடுவே விஜய் கரூர் வருகிறார் என்ற அறிவிப்பு. ஆகாசும், கோகுல ஸ்ரீயும் விஜயின் தீவிர ரசிகர்கள். எப்படியாவது அவரை நேரில் பார்த்து விட வேண்டும் என்று ஆசை. இதனால் கரூரில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு கோகுல ஸ்ரீ தனது தம்பியுடன் சென்றார். பின்னர் அவர்கள் விஜயை பார்க்க கூட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றனர்.