வதந்தி பரப்பினால் சட்டம் பாயும்: போலீஸ் கடும் எச்சரிக்கை | Karur stampede | TVK Vijay | TNPolice
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரித்து வருகிறது. ஒருபுறம் தமிழக போலீசாரும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனிடையே, ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்த கட்சி, பிடிக்காத கட்சி என்ற அடிப்படையில் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, சம்பவத்தின் போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை போலீசார் ஆராய துவங்கி உள்ளனர். இந்த வீடியோக்களில் உள்ள காட்சிகள், வெளியிடப்படும் விவரங்கள் அனைத்தும் உண்மைதானா? அவற்றை வெளியிட்டவர்கள் யார்? உள்நோக்கத்துடன் வீடியோ சோசியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு உள்ளதா? என விசாரிக்கின்றனர். இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசல் பற்றி சோசியல் மீடியாக்களில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக அவர்கள் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிந்து உள்ளனர். இதுதொடர்பாக சென்னை பெருநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்த அரசியல் கூட்ட நெரிசல் குறித்து யாரும் எந்தவித வதந்தியையும் பரப்ப வேண்டாம். சோசியல் மீடியாக்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு பொதுவெளியில் வதந்தி பரப்பும் வகையில் சோசியல் மீடியாக்களில் பொய் செய்திகளை பதிவிட்ட 25 நபர்கள் மீது புகார்களின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.