14 குழந்தைகள் இறந்த சோகம் ஸ்ரீசன் பார்மாவுக்கு நோட்டீஸ்! |Madhya Pradesh|children die|Kanchipuram
மத்திய பிரதேசத்தில் 1முதல் 7 வயதுடைய 11 குழந்தைகளும், ராஜஸ்தானில் 3 குழந்தைகளும் இருமல் மருந்து குடித்து இறந்தது நாட்டையே பதற வைத்தது. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட கோல்ட்ரிப்(coldrip) இருமல் மருந்து காஞ்சிபுரத்தின் சுங்குவார்சத்திரத்தில் உள்ள, ஸ்ரீசன் பார்மா கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. அந்த மருந்துக்கு, மத்திய பிரதேசம், தமிழக அரசுகள் தடை விதித்தன. அந்த நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த இருமல் மருந்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டது. கம்பெனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இரு மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் கடந்த 3ம் தேதி ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். இருமல் மருந்து மாதிரி பரிசோதித்ததில் 48 சதவீதம் டைஎத்திலீன் கிளைக்கால் ( Diethylene glycol (DEG)) என்ற நச்சு வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்திய உபகரணங்கள் துருப்பிடித்து இருந்ததும், அறைகள் அசுத்தமாக இருந்ததும், தகுதியற்ற ஊழியர்களை மருந்து தயாரிப்பில் பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, ஸ்ரீ சன் பார்மா நிறுவனத்திடம் மருந்து கட்டுப்பாட்டு துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், தயாரிக்கப்பட்ட மருந்தின் மொத்த அளவு, விநியோகிக்கப்பட்ட விவரம், மருந்து தயாரிப்பு முறை, தயாரிப்புக்கான இறுதி பரிசோதனை அறிக்கை, மூலப்பொருள்கள் கொள்முதல் மற்றும் பரிசோதனை சான்று, மருந்து பாட்டிலில் ஒட்டப்படும் லேபிள், கம்பெனியின் லேப் டெக்னிசீயன் பற்றிய விவரங்களை 5 நாள்களுக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.