பாலத்தில் இருந்து குதித்ததால் மாவுக்கட்டு! 2 பேர் கைது | Madurai | Chathirapatti police station
மதுரை பேரையூர் தாலுகா வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் வயது 29. அவரது நண்பர் 20 வயது அய்யனார். இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். பணியில் இருந்த ஏட்டு பாண்டியிடம், என்னை ஏன் அடிக்கடி விசாரிக்க வருகிறீர்கள் எனக்கேட்டு அவரை தாக்கினர். ஸ்டேஷன் அறைக்குள் அடைத்துவிட்டு கம்ப்யூட்டர், வாக்கி டாக்கி, மொபைல் போனை அடித்து நொறுக்கி தப்பினர். டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், பீமா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விருதுநகர் அல்லம்பட்டியில் பிரபாகரன், அய்யனார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்தவர்களை பிடிக்க முயன்ற போது, பாலத்தில் இருந்து பிரபாகரன் குதித்துள்ளார். இதனால் வலது கை, இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரபாகரன் மீது 3 கொலை, ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்துள்ளார். லேப் டெக்னீஷியனான பிரபாகரன் வேலையை விட்டுவிட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அய்யனார் மீது 2 ஆண்டுகளுக்கு முன் ஆணவக்கொலை செய்ததாக வழக்கு உள்ளது.