மேல்மலையனூர் அங்காளம்மன் தேரை வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Melmalayanur Angalamman Temple
அசைந்தாடி வந்த அம்மன் தேர் மெய்சிலிர்த்து நின்ற பக்தர்கள் மேல்மலையனூரில் பக்தி பரவசம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்ரவரி 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் 2ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் விழாவாக தீமிதி திருவிழாவும் நடந்தது. மாசி விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாள் தேரோட்டம் செவ்வாயன்று கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோயிலின் வடக்கு வாயிலில் இருந்து பம்பை- உடுக்கை, மேளதாளங்கள் முழங்க தேருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மா என பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தபோது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்களை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 900க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.