பன்னீர்செல்வத்தை மோடி சந்திக்காமல் போனது இதற்கு தான் modi visit | ops letter to modi | ops vs eps
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த லோக்சபா தேர்தலின் போது பாஜ கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த முறை அதிமுக-பாஜ கூட்டணி உருவானதால், அவரை பாஜ கழற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். அவர் தங்கள் கூட்டணியில் இருப்பதை இதுவரை பாஜ உறுதி செய்யவில்லை. இதனால் பன்னீர்செல்வம் டீம் ஏற்கனவே விரக்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக தூத்துக்குடி, திருச்சி கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடியை சந்திக்கவும் பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் மோடிக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். துாத்துக்குடி ஏர்போர்ட்டில் தங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி அளித்தால், மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுவேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வாசன் உள்ளிட்டோர் திருச்சி ஏர்போர்ட்டில் மோடியை வரவேற்றனர். ஆனால், பணிவான வார்த்தைகளுடன் உருக்கமாக கடிதம் எழுதியும், பிரதமர் மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின், பாஜவை தொடர்ந்து ஆதரித்து வரும் பன்னீர்செல்வத்தை, அக்கட்சி கைவிட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் வேதனை வெளிப்படுத்தி உள்ளனர். இதனால் பாஜவுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. விஜய் கூட்டணியில் சேர முயற்சி செய்து வருகிறார்.