54 ஏக்கரில் காணப்படும் சோழ மண்டலத்தின் பெரிய ஈமக்காடு |Mudhumakkal thazhi|Palayappatti | Tanjore
தஞ்சை பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு பாளையப்பட்டியில் தாழவாரி எனும் பகுதியில் மண் அரிப்பினால் புதைந்து கிடக்கும் ஈமத் தாழிகள் வெளியே தெரிகின்றன. இதுபற்றி அறிந்த மன்னர் சரபோசி அரசு கல்லூரி பேராசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராசன், வழக்கறிஞர் ஜீவக்குமார், சரஸ்வதி மகால் நூலக விற்பனை எழுத்தர் நேரு , முனைவர் பட்ட ஆய்வாளர் வீரமுத்து அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்க பயன்படுத்திய புதைகலன்களே ஈமத் தாழிகள். இது ஒரு சவ அடக்க முறை. ஈமத் தாழிகளுக்கு முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப் பேழை, மதமதக்கா பானை என வெவ்வேறு பெயர்களும் இருக்கிறது. சுமார் 54 ஏக்கர் பரப்பளவு தாழவாரி பகுதியில் காணப்படுவதால் இதுவே சோழ மண்டலத்துள் கிடைக்கப்பெறும் ஈமக் காடுகளுள் மிகப் பெரியதாக இருக்கக் கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். படைவீர்ர்கள் தங்கி இருக்கும் இடம் பாளையம் என சொல்லப்படுகிறது. அப்படி தங்கி இருந்த இடத்தில், போர் செய்து இறந்த வீர்ர்களுக்காக, எடுக்கப்பெற்ற ஈமத் தாழிகளாக இது இருக்கலாம். இங்கு காணப்படும் வேலைபாடுகளுடன் கூடிய அகன்ற வாய்களை கொண்ட தாழிகளுள் சில மண் அரிப்பினால் சிதைந்துள்ளன. இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மட்கலயங்களும் காணப்பெறுவதால், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி, எஞ்சிய சாம்பலை சிறிய மட்கலயங்களில் இட்டு சிறிய அளவிலான ஈமத் தாழிகளில் வைத்துப் புதைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.