தேசிய சீனியர் ரோல் பால் இறுதி போட்டியில் தமிழக பெண்கள் அணி | National Roll Ball Championship | Tam
திருச்சி தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில், 21வது தேசிய சீனியர் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடந்த 22ம் தேதி, முசிறி எம்.எல்.ஏ தியாகராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். 3 நாட்களாக நடந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட 28 மாநிலங்களில் இருந்து, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். செவ்வாயன்று நடந்த இறுதி போட்டியில், ஆண்கள் பிரிவில் உத்தரபிரதேச அணி 6 கோல் போட்டு, முதல் இடத்தை பிடித்தது. எதிர்த்து விளையாடிய ராஜஸ்தான் அணி மூன்று கோல் போட்டு 2ம் இடம் பிடித்தது. கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடிய ஜார்கண்ட் அணி 5 கோல் போட்டு, மூன்றாம் இடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் ராஜஸ்தான், தமிழக அணிகள் மோதின. ராஜஸ்தான் 4 கோல்கள் போட்டு முதல் இடத்தை பிடித்த நிலையில் 3 கோல்களுடன் தமிழக பெண்கள் அணி 2ம் இடத்தை பிடித்தது. இரண்டு முறை கோல் அடித்த நிலையில், கோல்டன் கோல் வாய்ப்பில், தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. மகாராஷ்டிரா அணியை எதிர்த்து விளையாடிய உத்தரபிரதேச பெண்கள் அணி இரண்டு கோல்களுடன் 3ம் இடத்தை பிடித்தது.