உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பருவமழைக்கு முன்பே பெருவெள்ளம்: அரசை சாடும் ராமதாஸ் | Ramadoss | PMK | Heavy rain | Water logging |

பருவமழைக்கு முன்பே பெருவெள்ளம்: அரசை சாடும் ராமதாஸ் | Ramadoss | PMK | Heavy rain | Water logging |

பருவமழைக்கு முன்பே பெருவெள்ளம்: அரசை சாடும் ராமதாஸ் | Ramadoss | PMK | Heavy rain | Water logging | வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரையில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் இறந்தனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் துவங்கி விட்டார்கள். புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான் காரணம். 4 பேர் ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் இறந்தனர். மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட தமிழக அரசும், மின்சார வாரியமும் மேற்கொள்ள வில்லை. அவர்கள் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு இது மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு. இவை அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் கலந்தாய்வுகளை நடத்தினார்கள். அவை அனைத்தும் பெயரளவிலான செயல்பாடுகளாகவே உள்ளன என்பதும், களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும் சில மணி நேரம் பெய்த லேசான மழையிலேயே அம்பலமாகியுள்ளது. இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை. வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன. மழை வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள் உள்ளிட்ட கருவிகள் மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுகொண்டுள்ளார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை