கடத்தல் கும்பல் காரில் இருந்த சீக்ரெட் ரூம் இதுதான் | Thanjavur case | car secret room | viral video
கடத்தல் கும்பல் காரில் இருந்த சீக்ரெட் ரூம் இதுதான் | Thanjavur case | car secret room | viral video தஞ்சாவூர் வழியாக காரில் கஞ்சா கடத்துவதாக இன்பார்மர் மூலம் தஞ்சாவூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் முக்கிய ரோடகளில் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தினர். தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் பகுதியில் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக நம்பர் பிளேட் இன்றி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் ஒன்றும் சிக்கவில்லை. ஆனால் காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். நம்பர் பிளேட் பற்றி போலீசார் கேட்டதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் காரை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது தான் சீட்டுக்கு அடியில் ஒரு ரகசிய அறை இருப்பதை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார் ரகசிய அறையை திறந்த போது உள்ளே பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருந்தது. 50க்கும் அதிகமான பொட்டலங்களில் மொத்தம் 103 கிலோ கஞ்சா இருந்தது. ஆந்திராவில் கஞ்சா வாங்கியதும், காரில் கடத்தி சென்று புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி, ரவிக்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த வீரப்பன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சா மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று டிஎஸ்பி கூறினார்.