பவன் கல்யாண் விழாவில் போலி IPS அதிகாரியின் திடுக் பின்னணி | Pawan Kalyan
பவன் கல்யாண் விழாவில் போலி IPS அதிகாரியின் திடுக் பின்னணி | Pawan Kalyan | Deputy Chief Minister | Andhra Pradesh | Fake IPS officer | ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் சென்றார். பவன் கல்யாண் பங்கேற்ற நிகழ்ச்சியில், 41 வயதான பாலிவாடா சூர்ய பிரகாஷ் என்பவர் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி சீருடை அணிந்து கலந்து கொண்டார். முதலில் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற அவர், பவன் கல்யான் பின்னாலேயே சுற்றி வந்தார். அங்கு பவன் கல்யாண் அடிக்கல் நாட்டும் போது புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் போலீசில் புகார் அளித்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது, போலி ஐபிஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. சூர்யபிரகாஷின் தந்தை தட்டி ராஜேருவில் 9 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். ஆனால் அதை பத்திரப்பதிவு செய்யவில்லை. கோவிட் காலக்கட்டத்தில் அவரது தந்தை இறந்தார். அதன்பிறகு உறவினர்களுடன் நிலம் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால் 2024 ஜனவரியில் ஹைதராபாத் சென்ற அவர், தான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். போலீஸ் என்றால் அனைவரும் பயந்துவிடுவார்கள். நிலத்தை அபகரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்துள்ளார். இதற்காக தான் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சூர்யபிரகாஷ் பங்கேற்றுள்ளார். அப்போது எடுத்த போட்டோக்களை உறவினர்களுக்கு அனுப்பியதுடன், வாட்ஸ் அப் ஸ்டேட்டசும் வைத்தார். சந்தேகம் அடைந்த அவரது உறவினர்களும், நண்பர்களும் மக்குவா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் தான் உண்மைகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து சூர்யபிரகாசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கார், அடையாள அட்டை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கருத்து தெரிவித்த பவன் கல்யாண், எனக்கு மக்கள் பணி செய்ய மட்டுமே தெரியும். எனது உயிருக்கு பாதுகாப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு பணி செய்வேன். இதற்கு மாநில டிஜிபி, புலனாய்வு அமைப்பு, உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார். =====