எடப்பாடி தேர்தல் வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு Edappadi palanisami election case
எடப்பாடி தேர்தல் வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு Edappadi palanisami election case Madras high court Judge velmurugan salem court police inquiry 2021 சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல முக்கிய விவரங்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக மிலானி என்பவர் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிலானி வலியுறுத்தியிருந்தார். மனுவை விசாரித்த சேலம் கோர்ட், புகார் குறித்து விசாரணை நடத்த, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. புகாருக்கு முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரிக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவர் அல்ல; அவர் எடப்பாடியில் போட்டியிடவும் இல்லை என்றார். வேட்புமனுவில் எந்த தகவலையும் எடப்பாடி பழனிசாமி மறைக்கவில்லை. ஆகையால் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என பழனிசாமி வழக்கறிஞர் வாதிட்டார். போலீஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கோர்ட் உத்தரவின் அடிப்படையில், சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்தார். எடப்பாடி பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தலாம். சேலம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரிதான். போலீஸ் விசாரணைக்கு பழனிசாமி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.