சீல் வைத்து நாடகமா? கலெக்டர் விளக்கமளிக்க கோர்ட் உத்தரவு | Madurai Bench | quarries | Dindigul
சீல் வைத்து நாடகமா? கலெக்டர் விளக்கமளிக்க கோர்ட் உத்தரவு | Madurai Bench | quarries | Dindigul சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், திண்டுக்கல் சின்ன முத்தனம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் பொதுநல மனு செய்தார். திண்டுக்கலில் மணல் குவாரிகள் செயல்பட, மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் நுாற்றுக்கணக்கான லாரிகளில் தினமும் அள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளு கின்றனர். சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர். மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் விடுகின்றனர். கனிமவளத்துறை முதன்மை செயலர், கமிஷனர், திண்டுக்கல் கலெக்டர், கனிமவள உதவி இயக்குநருக்கு புகார் அனுப்பினேன். விதிமீறலுக்கு அபராதம் விதித்து, சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய வளாகங்கள் ஏற்கனவே பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன என அரசு வக்கீல் வாதிட்டார். முன் வாசல் அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர பின் வாசலை பயன்படுத்துகின்றனர் என மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டு அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட போட்டோக்களை பார்த்து நீதிபதிகள் கோபம் அடைந்தனர். அதிகாரிகளின் கூட்டு சதியுடன் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றனவா என சந்தேகம் எழுகிறது. குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. கலெக்டர் வரும் 16ல் கோர்ட்டில் ஆஜராகி இப்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.