ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய மசோதா | Online gambling | Restrictions | New bill | Lok
ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நாடு முழுதும் மோசடி சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்படும் நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. இதனால் மோசடிக்கு காரணமான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் நடக்கிறது. இந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீது புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயத்தை ஊக்குவிப்பதை தடுக்கவும், அதன் விளம்பரங்களை தடை செய்யவும் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்மொழிந்தது. அதன் அடிப்படையில், மசோதாவின் வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. பெட்டிங், பந்தயம் தொடர்பான சூதாட்டம் கொண்ட செயலிகளை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம். இதுபோன்ற செயலிகளை கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்துதல் மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் இனி தண்டனைக்குரிய குற்றமாக மாற உள்ளது. இளைஞர்களை பாதுகாக்கும் நோக்குடன், பந்தயம் அல்லது சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்த இந்த மசோதா மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.