பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இனி தப்ப முடியாது | Pahalgam | Pakistan Supporters
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்தனர். பெயரை கேட்டு கேட்டு இந்து என்பதை தெரிந்து கொண்ட பிறகு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் எம்எல்ஏ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலத்தில் AIUDF எனப்படும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எதிர்கட்சியாக உள்ளது. இந்த கட்சியின் எம்எல்ஏவாக உள்ள அமினுல் இஸ்லாம், 2019ல் புல்வாவாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலும், பஹல்காமில் நடந்த தாக்குதலும் மத்திய அரசின் சதியால் நடந்தது என கூறினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அசாமில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அசாம் மாநில போலீசார் தாமாகவே அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினர். தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் அமினுல் இஸ்லாமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமினுல் இஸ்லாமோடு சேர்த்து இதுவரை 16 பேர் அசாமில் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பத்திரிகையாளர் முகமது ஜூபையர் ஹூசைன், ஐடி ஊழியர் முகமது அக்பர் பஹாவுதீன், வக்கீல் ஜாவேத் மஜூம்தார், முகமது மஹாஹர் மியா, முகமது சாஹில் அலி, முகமது முஸ்தா அஹமது, முகமது ஜாரிப் அலி, சுமோன் மஜூம்தார், மஷூத் அசார் அடங்குவர். இது தொடர்பாக பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தேவைப்பட்டால், இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறோம். தேச விரோத கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாரதத்திற்கும், பாகிஸ்தானுக்கும் ஒற்றுமை கிடையாது. இரண்டு நாடுகளும் எதிரிநாடுகள். நாம் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில்பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறும்ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை பாயும் என்றார். இதே போல திரிபுரா மாநிலத்தில் சமூக வலைதளத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேச விரோத கருத்துகளை பதிவிட்டதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜவஹர் தேப்நாத், குல்தீப் மண்டல், சாஜல் சக்கரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேகாலயா மாநிலத்தில் செய்தி சேனலின் சமூக வலைதள பக்கத்தில் தேச விரோத கருத்துகளை பதிவிட்டதற்காக சைமன் ஷைலா என்பவர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.