அரை மணி நேரம் காத்திருந்து அவமானப்பட்ட பாக் பிரதமர் | Shehbaz Sharif | Donald Trump | Asim Munir
நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொது சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். அப்போது, காசா மீதான இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினர். அப்போது, அனைத்து கதவுகளும் மூடப்பட்டு ரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க நேரப்படி வியாழனன்று மாலை 5 மணிக்கு ஷெபாஸ் ஷெரீப்பும் அசிம் முனீரும் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளனர். அவர்களை, அங்கிருந்த மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, ட்ரம்ப் அலுவலகப் பணியில் இருந்ததால் இருவரும் காத்திருக்க வைக்கப்பட்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை ட்ரம்ப் அறைக்கு வெளியே இருந்தனர். அதன் பிறகே இருவரையும் அழைத்து பேசி இருக்கிறார். அப்போது நடத்த பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ராணுவ தளபதி அசிம் முனீருடன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் பக்கம் நிர்க்கும் அமெரிக்காவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். ட்ரம்ப்பை, அமைதியின் மனிதர் என ஷெரீப் வர்ணித்தார். உலகின் பல பகுதிகளில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ட்ரம்ப்பின் நேர்மையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தைரியமான, துணிச்சலான, தீர்க்கமான தலைமைப்பண்பை ட்ரம்ப் கொண்டுள்ளதாகவும் ஷெரீப் பாராட்டினார். கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் செய்த சமரச முயற்சிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இதன்மூலம், தெற்காசியாவில் ஒரு பெரிய பேரழிவைத் தவிர்க்க ட்ரம்ப் உதவியதாக பிரதமர் கூறினார்.