நேரத்தை வீணடிக்காத மோடியின் சாமர்த்தியம்: நெகிழும் பாஜவினர் | PM Modi | Not wasting time | Programm
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும் மனிதனுக்கு முக்கியமானது. அதனால் நேரத்தை வீணடிக்க கூடாது என பெரியோர் சொல்வர். அதற்கு சிறந்த உதாரணம், பிரதமர் மோடி என்கின்றனர் பா.ஜவினர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த வாரம் நடந்த சம்பவம் பா.ஜ வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 26ம் தேதி மஹாராஷ்டிராவின் புனேவில் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தார். ஆனால் அன்று புனேவில் சரியான மழை; விமானம் இறங்க முடியாது என கூறி விட்டனர். இதனால் மோடியின் புனேவிசிட் ரத்தானது. மற்ற நிகழ்ச்சிகளோ, அதிகாரிகள் கூட்டங்களோ நடத்த குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது தேவைப்படும். இந்த 2 மணி நேரம் எப்படி சும்மா இருப்பது... உடனே தன் உதவியாளர்களிடம் ஹரியானாவில் உள்ள பா.ஜ பூத் ஏஜன்ட் அனைவரிடமும் போனில் பேச விரும்புகிறேன்; அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறி இருக்கிறார் பிரதமர் மோடி. உதவியாளர்கள் அனைவரும் உடனடியாக 400க்கும் மேற்பட்ட மொபைல் எண்களை தொடர்பு கொண்டு, பூத் ஏஜன்ட்களை தயார் செய்தனர். அவர்களிடம் ஒரே நேரத்தில் போனில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த மாதம் நடக்க உள்ள, ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு உங்களுடைய கடுமையான உழைப்பு தேவை என அவர்களிடம் கூறினாராம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியபோது, ஹரியானாவில் தான் சந்தித்த சுவாரஸ்யமான விஷயங்களையும், பூத் ஏஜன்டுகளுடன் பகிர்ந்து கொண்டாராம் பிரதமர்.