உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body

RAW-வை சீண்டி மூக்குடைந்த அமெரிக்க கமிஷன் RAW vs US | sanctions on RAW | India vs US religious body

அமெரிக்காவை சேர்ந்த யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன், 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிப்பதாக உள்ளது. சிறுபான்மையினர் தொடர்ந்து மோசமாக நடத்தப்படுகின்றனர். 2024 பார்லிமென்ட் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் நடந்தன. மத சுதந்திரத்தை மீறுவதால், இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து வெளிநாடுகளில் வேவு பார்க்கும் உளவு அமைப்பான ரா, வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கொலையில் ஈடுபட்டுள்ளது. அதனால் ரா அமைப்பின் மீது குறிப்பிட்ட பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். பிரதமர் மோடி மற்றும் அவர் சார்ந்துள்ள பா.ஜ., தொடர்ந்து முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி இந்தியா மீது சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் அபாண்ட பழிப்போடுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு ஆண்டு அறிக்கையிலும் இந்தியாவை பற்றி சாடுவது வழக்கம். இருப்பினும் இந்த முறை ஒரு படி மேலே போய் ரா அமைப்புக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறது. அமெரிக்காவின் இந்த கமிஷன் அறிக்கைக்கு இந்தியா ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தது. நம் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கை: இந்த அமைப்பின் 2025ம் ஆண்டுக்கான அறிக்கையைப் பார்த்தோம். அது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமாகவும், அரசியல் நோக்கத்துடன் கூடிய அனுமானங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், இந்த அமைப்பு மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை, நாடு முழுதும் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகள் நடப்பதாக பூதாகாரமாக்க பார்க்கின்றனர். மத சுதந்திரம் தொடர்பாக உண்மையான அக்கறையுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரியவில்லை. இந்தியா 140 கோடி மக்களைக் கொண்டது. மனித குலம் அறிந்துள்ள அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். ஆனால், இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையை, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற நல்லிணக்கத்துடன் செயல்படும் பாரம்பரியத்தை இந்த அமைப்பு கவனிக்கவில்லை. உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல், தெரிந்துகொள்ள முயற்சியும் செய்யாமல் அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த அமைப்பின் நோக்கம் தான் கவலைக்குரியதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை, கவலைக்குரிய அமைப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும், அஹிம்சையை கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது என்று அதிரடி காட்டி இருக்கிறது இந்தியா. அமெரிக்க அமைப்பின் பரிந்துரைகள், அமெரிக்க அரசைக் கட்டுப்படுத்தாது. எனவே ரா அமைப்பின் மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை