அரசியல்வாதிகள் ஆசியுடன் போதை புழக்கம்: கவர்னர் குற்றச்சாட்டு | RN Ravi | dmk govt | mk stalin
தமிழக கவர்னர் ரவி, தமது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் மிகச்சிறந்த கல்வித்துறை உள்கட்டமைப்புகள் இருந்தாலும், ஏழை, எளிய குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளை நம்பித்தான் இருக்கிறார்கள். 60 சதவீத இளைஞர்கள் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். ஆனால், அந்த பள்ளிகளின் கல்வித்தரம் இல்லை. ஏழை மாணவர்களின் கற்றல் தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இன்னமும் பட்டியல் இன மக்களை பிரிக்கும் சுவர்கள் இருக்கிறது. சுதந்திரம் அடைந்த 78 ஆண்டுகள் ஆன பிறகும், சமூக பாகுபாடு பழக்க வழக்கங்கள் பரவலாக இருப்பது அவமானம். தமிழகத்தில் அதிகமான இளைஞர்கள் தற்கொலை நடக்கிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் இந்த முடிவு எடுக்கின்றனர். இது நாட்டிலேயே மிக அதிகம். சமூகம், உளவியல், பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளின் பிரதிபலிப்புதான் இந்த தற்கொலைகள். தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியுடன் இது நடப்பதால், அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. சிறார் பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு போக்ஸோ வழக்குகள் 56 சதவீதமும், பாலியல் வழக்குகள் 33 சதவீதமும் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று கவர்னர் ரவி கூறியுள்ளார். முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ரவி கட்சி தலைவர்களை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். ஆனால் அவரது அழைப்பை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் கவர்னர் மற்றும் ஆளுங்கட்சி இடையேயான மோதல் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது.