விழாவை காண பல்வேறு பகுதியில் இருந்து ஏர்வாடியில் குவிந்த மக்கள்! Santhanakoodu Festival | Ervadi
ஏர்வாடி சந்தனகூடு பெருவிழா! யானை, குதிரை நடனத்துடன் களைகட்டிய சந்தனகூடு ஊர்வலம்! ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல்குத் புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. அங்கு மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா ஏப்ரல் 29ம் தேதி துவங்கியது. மே 9 கொடியேற்றம் நடந்தது. சந்தனகூடு விழாவுக்காக முதல் தரம் வாய்ந்த சந்தன கட்டைகள் வாங்கி பன்னீரில் ஊறவைத்து அவற்றை கற்களில் வைத்து தோய்த்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் மவுலீது எனப்படும் புகழ் மாலை உலக நன்மைக்காக தொடர்ந்து ஓதப்பட்டது. யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வான வேடிக்கையுடன் தைக்காவில் போர்வை எடுக்கும் நிகழ்வு களைகட்டியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து துவங்கியது. அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5:50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த பின்பு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண வண்ண போர்வைகளால் போர்த்தப்பட்டு மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. இந்த விழாவை காண தெற்காசிய நாடுகளை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். தென் மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சந்தன கூடு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.