போதை பொருள் வழக்கில் சவுக்கு சங்கருக்கு டிச.20 வரை காவல் | Savukku Shankar | 2 Days court custody
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசியதாக மே 4ல் தேனியில் உள்ள ஓட்டலில் வைத்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் 2½ கிலோ கஞ்சா இருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசாரால் கஞ்சா வழக்கிலும் அவர் கைதானார். அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பாய்ந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் அவர் யூடியூப் மூலம் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து பரபரப்பு கருத்துகளை பேசி வந்தார். இன்னொரு பக்கம் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரன்ட் உத்தரவை பிறப்பித்தது. நேற்று சென்னை வந்த தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து மதுரை அழைத்து சென்றனர். இன்று மதுரை போதைபொருள் சிறப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார். போலீசார் சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.