பல ஏர் இண்டியா விமானங்கள் தாயகம் திரும்பின; பயணிகள் கடும் அவதி | several Air India flights return
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா விமானம், டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மற்ற அனைவரும் இறந்தனர். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட இன்னும் பலர் இந்த விபத்தில் இறந்ததால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 5.39 மணிக்கு மும்பையில் இருந்து லண்டனுக்கு ஏர் இண்டியா விமானம் புறப்பட்டது. 3 மணி நேரம் வானில் பறந்த அந்த விமானம் மும்பை விமான நிலையத்துக்கே திரும்ப வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டதால் விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்ததாக ஏர் இண்டியா நிர்வாகம் விளக்கம் அளித்தது. மும்பை - லண்டன் விமானம் மட்டுமல்ல; இஸ்ரேல் - ஈரான் சண்டையால் இன்னும் பல இந்திய விமானங்களின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்தன. இன்னும் பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.