ஆண்டுக்கு 3,000 கோடி வருவாய் இழப்பு! சாதகம் vs பாதகம் | Thoothukudi Sterlite plant | copper plant
ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தமிழகம் இழந்த முக்கிய வாய்ப்பு! துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2018ல் மூடப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்பட்ட வழக்கு அதே ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பேற்று கொள்ளப்போவது யார்? என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடந்தும் வழக்கில் பலன் இல்லை. சிபிஐ விசாரணை சரியில்லை. ஒரு நபர் ஆணையம் அமைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்புலம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். வழக்கை பொறுத்தவரை சில நபர்கள் வழியே அரசு அதிகாரிகள் சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்களுடைய சொத்து பட்டியலை ஆராய்ந்து விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகார மட்டத்தில் ஏற்பட்ட குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது. நீதிபதிகளோ, ஒரு நபர் ஆணையமோ, மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆலை மூடப்பட்டதால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.