ஓசூர் பள்ளியில் சம்பவம்: மாணவன், ஆசிரியருக்கு சோகம் student and head master dies artificial pond
ஒசூர் அருகே உள்ள எலுவப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 100 மாணவ மாணவிகள் படிக்கின்றனர் இன்று மதிய உணவு இடைவேளை விட்டதும் சாப்பிட்டு முடித்து விட்டு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத அந்த விபரீதம் நடந்தது. 3 வகுப்பு மாணவன் நிதின் (8) பள்ளியின் பின்புறம் விவசாய நிலத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்தான். நிதின் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை பார்த்த மற்ற மாணவர்கள் அலறினர். ஓடிச் சென்று தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜாவிடம் கூறினர். அவர் விரைந்து சென்றார். அப்போது அருகில் ஆள் யாரும் இல்லை. சிறுவனை காப்பாற்ற தண்ணீர் தொட்டிக்குள் அவரே இறங்கினார். அந்த தொட்டி 10 அடிஆழம் கொண்டது. தார்ப்பாயால் தொட்டி அமைக்கப்பட்டிருந்த காரணத்தால் கால் வழுக்கி அவரும் நீரில் மூழ்கினார். விஷயத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஓடிவந்தனர். அதற்குள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சடலங்களை மீட்ட பாகலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிதினின் பெற்றோர், உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தலைமை ஆசிரியர் கவுரி சங்கர் ராஜாவின் மனைவியும் அரசு பள்ளி ஆசிரியைதான். தர்மபுரி கலெக்டர் சதீஷ்குமார், மாணவன் மற்றும் தலைமை ஆசிரியரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.