காத்திருப்பை தவிர்க்க பதிவுத்துறை புதிய நடவடிக்கை! Sub Registrar Office | Document Registration | TN
பத்திரங்களை பதிவு செய்ய வருவோர், சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பதை தவிர்க்க, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2018ல், ஸ்டார் 2.0 சாப்ட்வேர் அடிப்படையில் பத்திரப்பதிவு தொடர்பான பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. இதன்படி, சொத்து வாங்குவோர், அதுகுறித்த தகவல்களை, பதிவுத்துறை இணையதளத்தில் முன்கூட்டியே உள்ளீடு செய்யலாம். அதன் அடிப்படையில், அந்த பத்திரம் பதிவுக்கு ஏற்றதா, இல்லையா என்பதை, சார் பதிவாளர்கள் முடிவு செய்வர். இதில் ஏற்கப்படும் பத்திரங்களுக்கு மட்டுமே, பதிவுக்கான நேரம் ஒதுக்கி, டோக்கன் வழங்கப்படும். இதையடுத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் நேரில் சென்று, பத்திரப்பதிவு பணிகளை முடிக்கலாம். இதனால், மக்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் செலவிடும் நேரம் வெகுவாக குறைகிறது. இந்நிலையில், ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிக்கும் பணி, 323 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறிதாவது: பத்திரப்பதிவு தொடர்பான பெரும்பாலான பணிகளை, ஆன்லைன் வாயிலாக மக்கள் மேற்கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள், ஸ்டார் 3.0 மென்பொருளில் சேர்க்கப்பட உள்ளன. குறிப்பாக, சொத்து பரிமாற்றத்துக்கான பத்திரங்களை, மக்கள் தாங்களாகவே தயாரிக்கும் வசதியும் இதில் ஏற்படுத்தப்படும். தற்போது, பத்திரப்பதிவு இணையதளத்தை, கணினிகள் வாயிலாக மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதை எளிமையாக, மொபைல் போன் வாயிலாகவும் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். குறிப்பாக, மக்கள் சார் பதிவாளர் அலுவலகம் வராமல், தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும். வீடியோ அழைப்பு வாயிலாக சம்பந்தப்பட்ட நபர்களை, சார் பதிவாளர் விசாரித்து, பத்திரப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்படும், என்று அவர் கூறினார்.