13 ஊர்களில் ஊற்றப்போகும் மழை-முக்கிய தகவல் tn heavy rain today |chennai imd imd heavy rain alert
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்க்கும். நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை சிட்டம்பட்டி, சிவகங்கையின் திருப்புவனம் பகுதிகளில் தலா 40 மிமீ, மதுரை ஏர்போர்ட், திருமங்கலம், கன்னியாகுமரியின் பூதப்பாண்டி பகுதிகளில் தலா 30 மிமீ மழை பதிவாகி உள்ளது.