உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் மட்டும் சுங்க கட்டண உயர்வில் அரசியல் நடப்பதாக அதிகாரிகள் புலம்பல்! Tollgate

தமிழகத்தில் மட்டும் சுங்க கட்டண உயர்வில் அரசியல் நடப்பதாக அதிகாரிகள் புலம்பல்! Tollgate

தமிழகத்தில் 6,805 கிலோமீட்டர் துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு போக்குவரத்திலும், மத்திய - மாநில வருவாயை அதிகரிப்பதிலும், தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 78 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு, ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை, 5 முதல் 10 சதவீதம் உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளிப்படையாக தெரிவிக்காமல், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அடக்கி வாசிக்கிறது. இது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசும் இதை கண்டு கொள்வதில்லை. அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் அறிக்கை வெளியிடுகின்றனர். இதை தொடர்ந்து, சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. எனவே, கட்டண உயர்வை அனைவரும் அறியும்படி அறிவிக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வந்தது. கோவிட் பாதிப்புக்கு பின், சுங்கக் கட்டண வசூலின் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, ஏப்ரலில் மட்டுமின்றி செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. கட்டண உயர்வு என்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் மட்டும் இது அரசியலாக்கப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, மொத்தமாக வெளியிட இயலாத சூழல் நிலவுகிறது. அதேநேரம், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களில், இது தொடர்பாக விளம்பரம் செய்யப்பட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரும் காலங்களில் நிலைமை சரியானால், கட்டண உயர்வு பட்டியல், முறைப்படி வெளியிட வாய்ப்புள்ளது, என்று அந்த அதிகாரி கூறினார்.

செப் 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mahendran Puru
செப் 02, 2025 08:00

இங்கே உள்ள பாஜக தங்கங்கள் ஏன் இது போன்று விஷயங்களில் வாய் திறப்பதில்லை? உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் அறிக்கவிடும் அ மலை ஏன் மௌனம்? தமிழகம் சுரண்டப்படும்போது குறட்டை விடுவர், ஓட்டு மட்டும் வேண்டுமா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை