சீறிய யானை... பின்னோக்கி பறந்த வேன்... பதறவைத்த காட்சி topslip ride | topslip elephant attack video
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரக பகுதியில் இருக்கும் டாப்சிலிப், பரம்பிக்குளம் பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். எழில் கொஞ்சும் காடுகளின் அழகையும் அங்கு சுற்றித்திரியும் விதவிதமான விலங்குகள், பறவைகளையும் பார்த்து ரசிக்கின்றனர். அப்படி தான் டாப்ஸ்லிப் பகுதிக்கு இன்று வேனில் வந்திருந்த சுற்றுலா பயணிகள், ரோட்டோரம் மேய்ந்து கொண்டிருந்த யானையையும், அதன் குட்டியையும் ரசித்து பார்த்தனர். திடீரென ஆக்ரோஷம் அடைந்த பெரிய யானை ரோட்டின் எதிர் திசையில் இருந்து காரை நோக்கி பிளிரியபடி அசுர வேகத்தில் ஓடி வந்தது. ஓரிரு நொடிகளில் வேனை தாக்கும் அபாயம். சாதூரியமாக செயல்பட்ட டிரைவர், மின்னல் வேகத்தில் வேனை ரிவர்சில் ஓட்டினார். முன்னோக்கி செல்வதை காட்டிலும் வேகமாக வேன் பின்னோக்கி பறந்ததால் ஆக்ரோஷமான யானையிடம் இருந்து சுற்றுலா பயணிகள் உயிர் தப்ப முடிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‛விலங்குகளை பக்கத்தில் சென்று பார்க்க ஆசைப்படக்கூடாது. அவற்றை தூரமாக நின்று பார்ப்பது தான் பாதுகாப்பானது. வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் பக்கத்தில் சென்றால் தங்களுக்கு ஏதோ அச்சுறுத்தல் வருகிறதோ என்று கருதி அவை நம்மை தாக்க கூடும் என்றனர்.